வசப்படுமா
உழைக்கும் கரங்கள் உறுதிகொள் நெஞ்சம்
பிழைப்பில் நேர்மை பிறர்நலம் பேணல்
நாடும் மொழியும் நல்லுயிர் கலத்தல்
தேடும் அறிவினில் முடிவிலா நாட்டமே
மனிதப் பிறப்பின் மாண்புறு இலக்கணம்
இனியொரு விதியும் இதன்மேல் இல்லை
குறுக்கு வழியில் கொள்ளை தேடுவோர்
உறுப்பிலாப் பிண்டம் உணர்விலா மரங்கள்
குருதியை உறிஞ்சிக் குடிக்கும் கூட்டம்
தெருவில் கழிவினைத் தின்பதை யொக்கும்
உழைப்பின் மலர்ச்சியே உலகிடைப் புதுமை
நிலைத்த புகழின் ஊற்றும் அதுவே
கனலிடைப் பட்ட இரும்புத் துண்டாய்
புனலிடை ஓடும் காகிதப் படகாய்
வாழ்வதை இன்பமாய் வழக்கமாய்க் கொண்டவர்
தாழ்வுறல் நீதியா தழைக்குமா அறங்கள்
பாடு படுபவன் உயர்ந்திட மகிழ்வோம்
நாடவன் கையில் வசப்பட எழுவோம்.
Friday, March 19, 2010
Sunday, February 8, 2009
என்று விடுதலை ?
அயல்நாட் டவனின் ஆட்சியை மாற்றும்
அருஞ்செயல் ஒன்றே விடுதலை யாமோ
புயலாய் வீசும் மடமை இருளில்
புதைந்து போயினை, விடுதலை என்று?
பேசும் மொழியில் ஆற்றும் பணியில்
பிறமொழி கண்டாய் அடிமையென் றானாய்
காசும் பொருளும் வாழ்வென் றாகிக்
கல்மனங் கொண்டாய், விடுலை என்று?
அண்டை வீட்டான் அழுது கிடப்பினும்
அளவைக் கூட்டித் திரையிசை கேட்பாய்
பண்பில் மரமே, தன்னலப் பேயே,
பள்ளம் வீழ்ந்தனை, விடுதலை என்று?
ஆணவம் பேரவா அடுத்துக் கெடுத்தல்
அழிக்கும் பகைமை அறமிலா வாழ்க்கை
கோணல் அறிவு கூட்டம் மறுத்தல்
கொடுந்தீ மூழ்கினை விடுதலை என்று?
Friday, December 14, 2007
Subscribe to:
Posts (Atom)